சமீபத்தில் நீயா நானாவில் இடம் பெற்ற பெண்ணியம் தொடர்பான விவாதத்தில், வெகுவாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர், “கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற விதிமுறையை தன் மகிழ்ச்சிக்கு காரணமாய் நினைத்த ஒரு பெண் (பெண்ணியவாதிகள் அல்லாத அணியில் இருந்த பெரும்பாலானோர் அவ்வாரே நினைத்திருப்பர்)
அந்த பெண்ணின் வெகுளித்தனமான பேச்சும், தன் கணவன் மீது வைத்திருந்த காதலையும் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பர். ஒரு இடத்தில், கணவன் தன் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலையை நள்ளிரவு வரை செய்து கொண்டிருந்த போது , அந்த பெண்ணும் அவருடன் அமர்ந்திருந்ததாக கூறி மகிழ்ந்தாள். “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தவங்க…நீ உக்காந்திருக்கனு ஒரே காரணத்துக்காக…தூங்காம கண் முழிச்சுகிட்டு இருக்காங்க…அது ஒனக்கு பெருமையாடா?”, என கேட்க தோன்றிய போதும், “அவர் பாவம்…கண் முழிச்சுகிட்டு இருக்காரு…நான் மட்டும் கொறட்டை விட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்”, என சட்டென பதிலளிக்க இருக்கும் பெண்ணிற்கு, இக்கேள்விகள், கணவனை ‘இழிவு’ படுத்தும் பெண்ணிய பேத்தல்.
எதிர் அணியில் இருந்த பல பெண்ணியவாதிகள் பேசியவை, “என்னம்மா…இது கூட தெரியாம இருக்க”, “உன் தலைல society நல்லா மொளகாய் அறைக்குது”, மாதிரியான தோரணையில் இருந்த போது, ஓவியா அவர்களின் வார்த்தைகள், எதிர் அணியில் உள்ள பெண் யோசிக்க வேண்டும் என்ற ஒரு ஆதங்கத்தில் வெளிவந்ததாகவே எனக்கு தோன்றியது.
கணவனை கொண்டாடிய பெண்ணை, கோபி உட்பட அனைவரும் கைதட்டி புகழ்ந்த போது ,ஓவியாவின் ஒரு வாக்கியம், சாட்டையடி
“கணவன் மனசு நோகாம நடந்துகறீங்க சரி…அப்படியே அவர் அடிக்கறதையும் தாங்கிகிட்டு இருந்தா…உங்க பொண்ணும் அதுல ஒன்னும் தப்பில்லைன்னு தான் நினைப்பா”.
அந்த பெண் கூறியவை அனைத்தையும் “சூப்பர்ங்க …மனசுல பட்டத பேசறாங்க; சந்தோஷமா தான் இருக்காங்க”, என கூறியவாறு புகழ்ந்து தள்ளிய கோபிநாத், ஓவியா அவர்களின் இவ்வாக்கியத்திற்க்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்காதது வருத்தமே.
“புருஷன் தான..”, “பாவம் என்ன tension ஓ”,என கணவன் செய்யும்’சரியற்ற’செயல்கள் அனைத்தையும் பொருத்துக்கொள்ளும் பெண்கள், ஒரு நிமிடம், இந்த ஒரு சூழ்நிலையை யோசிக்க வேண்டும்.
homemaker எனவும் வீட்டின் மகாலட்சுமி எனவும் புகழப்படுகிறீர்கள். ஒரு நாள் பிள்ளைகளின் பிடிவாதம் பொருக்க முடியாமல் போகிறது. வீட்டிற்கு வரும் கணவன், ஏதோ சாதாரணமான கோரிக்கையை முன் வைக்கும் போது, உங்களுக்கு எரிச்சல் அதிகமாகி, கணவனை அறைந்து விடுகிறீர்கள். “வீட்ல இருக்கற டென்ஷன் ல அடிச்சிட்டா”, என உங்கள் கணவர் பொருத்துக் கொள்ளப் போகிறாரா?
‘Tension’இல் என்றாவது உங்கள் கணவர் அவர் மேலதிகாரியையோ, அவர் கூட வேலை செய்பவர்களையோ அடித்துள்ளாரா? சக மனிதனை அடிப்பது என்பதே ஒரு கேவலமான செயல் எனில், வீட்டிற்கு வெளியில் ஏற்படும் டென்ஷன் அனைத்தும், வீட்டிலிருக்கும் மனைவியை அடித்தால் சரியாகும் என நினைக்கும் ஒரு ஆண் மகன் கோழை! தன் பிரச்சனைகளை பிறருக்கு தீங்கு இழைத்தே தீர்த்துக்கொள்ள நினைப்பவன் அறிவிலி.
‘தொட்டு தாலிகட்டின பொண்டாட்டிய அடிக்கறதுல தப்பொன்னும் இல்லையே’ என நினைக்கும் போது, அவன் அந்த பெண்ணை ஒரு சக மனிஷியாகக் கூட மதிக்கவில்லை என்பது தெளிவு பெறுகிறது. அதை தட்டிக்கேட்காமல் ‘சுமதாங்கியா’ பொருத்துக்கொள்ளப் போகிறவர்கள், உங்கள் செல்ல மகளுக்கு நல்ல வாழ்க்கை பாடம் தான் சொல்லித் தருகிறீர்கள்.
ஓவியாவின் வார்த்தைகளை கேட்ட பொழுது, நினைவிற்கு வந்தது 1991இல் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘பெண்’ தொடரும், அதில் இடம் பெற்ற, ‘ராஜி மாதிரி பொண்ணு’ கதையும் தான். சமீபத்தில் You tube வழியாக அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்…