“பரவாயில்ல மனோஜ் நான் பின்னாடியே உக்காந்துக்கறேன்”, என கூறியபடி, மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்தான் சதிஷ்.
இருக்கைப் பட்டியை போட்டுக்கொள்ள நினைவு படுத்தியபடி, வண்டியை கிளப்பினான் வருண்.
“காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது;
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்…”, என ரட்சகன் படப்பாடல் வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
“போச்சுடா திரும்பவுமா…???”, என அலுத்துக்கொண்டான் சதீஷ்.
“என்ன ஆச்சு பாஸ்…நல்ல பாட்டு தான? infact ஸ்ரீனிவாஸ் பாடினதுல, என் favorite இதுதான்”, என கூறினான் மனோஜ்.
“காலைல டீ கடைல இருக்கும் போது, “அம்மான்னா சும்மா இல்லடா…அவ இல்லனா யாரும் இல்லடா” பாட்டு.
அப்பறம் பக்கத்து டெஸ்க் ல இந்த தினேஷ்…”நானாக நானில்லை தாயே…”, பாட்ட போட்டு மெய்மறந்து ரசிச்சிட்டு இருந்தான்.
அதுல நடுவுல ஒரு வரி…”கோயில் தொழும் தெய்வம்…நீ இன்றி நான் காண வேறில்லை”
போதும்டா சாமினு டெஸ்க் ல இருந்து எஸ்கேப் ஆனா…இப்ப கார்லயும்!!! பாட்டுக்கு situation எதுவும் சரியா அமையலனா, உடனே “தாய்ப்பாசம் தீம் தான்ப்பா”னு எழுத ஆரம்பிப்பாங்க போல”, என புலம்பி முடித்தான் சதிஷ்.
“நீங்க இப்பிடி பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கல. ஒரு குழந்தைய பெத்து வளக்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா…அத தனி ஆளா நம்ம அம்மாக்களும் மனைவிமார்களும் செய்யும் போது, அத புகழறதுல என்ன தப்பிருக்கு?”, என ஒரு வருத்தத்துடன் தன் கோபத்தை வெளிப்படுத்தினான் மனோஜ்.
“தனி ஆளா எல்லாத்தையும் செய்யறா”னு சொல்றீங்கல…அதுதான் பிரச்சனையே! ஒரு கொழந்தை உருவாக தேவையான உடல் அமைப்பு பொண்ணுக்குத்தான் இருக்கு; அந்த வேலைய அவ செய்யும் போது, நம்ம society அவளோட உடல் தளர்வ மட்டும் தான் பாக்குது. அவங்களால முடிஞ்ச ரெண்டு மூணு வீட்டு வேலைய பண்ணிட்டு, இது மாதிரி, “சூப்பர் மா நீ…”, “நான் கண்ட தெய்வம்”னு மெலடி பாடிட்டு, அவங்க அவங்க வேலைய பாக்க போய்டுறாங்க”, என சதீஷ் கூறி முடிப்பதற்குள்,
“வேற என்ன பண்ண முடியும் சொல்றீங்க…நாலு மாசம் பொண்ணு சொமக்கட்டும், அப்பறம் ஒரு 5 மாசம் அவ புருஷன் சொமந்தா சரியா இருக்குமா?”, என புத்திசாலித்தனமாய் பேசியதாய் நினைத்து, கொள்ளென சிரித்தான் மனோஜ்.
வேறு யாரும் காரில் சிரிக்கவில்லை எனக்கண்டு, சிரிப்பதை நிறுத்தினான்.
“seriously சதிஷ்…நீங்க சொல்ற வேலைகள தவற husbands என்ன ஹெல்ப் செய்யணும்னு சொல்றீங்க? என் wife pregnant ஆ இருந்த போது, பாத்திரம் தேய்க்கறது or வேற எந்த கஷ்டமான வேலையா இருந்தாலும் நான்தான் செய்வேன். அத தவற, அவ டாக்டர்/scan appointments க்கு கூட்டிகிட்டுப் போவேன். ஏதோ சொல்ல வரீங்கனு தெரியுது. ஹோட்டல் வந்தாச்சு. சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”, என அமைதியாய் பதிலளித்தான் வருண்.
உணவகத்தில், அவரவர் விருப்பத்துக்கேற்ப, மதிய உணவை உத்தரவிட்டனர்.
“சாரி பாஸ்…நீங்க ஏதோ சீரியசா பேச வரும் போது, நான் அப்பிடி சிரிச்சிருக்கக் கூடாது…நீங்க சொல்லுங்க”, என மீண்டும் உரையாடலை தொடங்கினான் மனோஜ்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல மனோஜ். ‘Post natal depression’ பத்தி நீங்க யாராவது கேள்வி பட்டிருக்கீங்களா?”, என்ற கேள்விக்கு, அமைதி மட்டுமே பதிலாய் வர, தொடர்ந்தான் சதிஷ்.
“கர்ப்பிணி பெண்களுக்கு usual ஆ டெலிவரிக்கு அப்பறம் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அது என்ன, எதுனால வருதுன்னு தெரியாது…தெரிஞ்சிக்க ஆசைப்படவும் இல்ல. ஆனா போன வாரம், என் schoolmate ஓட மனைவிக்கு, அந்த கண்டிஷன் ரொம்ப மோசமாகி, ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணினாங்க.
அதுக்கு அப்பறம் internet ல அத பத்தி படிக்கும் போது தான், அது ஒரு சீரியசான கண்டிஷன்னு புரிஞ்சது”, என சதிஷ் ‘பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தம் பற்றி பேச ஆரம்பித்தான்.
“இந்த மாதிரிதான் ஒரு கண்டிஷன் பத்தி மலரோட டெலிவரிக்கு அப்பறம் டாக்டர் பேசினாங்க. சாரி மனோஜ், மலர் என் மனைவி. அது postpartum depression னு நினைக்கறேன்”, என தனக்கு தெரிந்ததை கூறினான் வருண்.
“அட…ஆமாம். ஒரு form குடுத்து fill up பண்ண சொன்னாங்க. மலரோ நானோ அத பெருசா பொருட்படுத்தல”, என சட்டென நினைவுக்கு வந்ததையும் உரையாடலில் இணைத்தான்.
“ஆமாம் வருண்…அத postnatal இல்ல postpartum depression சொல்லுவாங்க. கர்ப்பமா இருக்கும் போது வர்ற மனத்தளர்ச்சிய antenatal depression னு சொல்லுவாங்க. இந்த கண்டிஷனுக்கான அறிகுறிகள் நெறையா இருக்கு…ஆனா எல்லா அறிகுறியும் எல்லா பெண்களுக்கும் ஏற்படறது இல்ல. உதாரணத்துக்கு ஒரு காரணமும் இல்லாம அழுவாங்க, தூக்கம் சரியா வராது; சில சமயங்கள்ல ரொம்ப அதிகமா தூங்குங்க, ரொம்ப சோர்ந்து போய் இருப்பாங்க, காரணமே இல்லாம சுத்தி இருக்கறவங்க கிட்ட எரிஞ்சு விழுவாங்க. இதெல்லாம் அந்த மனத்தளர்ச்சியோட வெளிப்பாடுனு டாக்டர்ஸ் சொல்றாங்க”, என PPD யின் அறிகுறிகளை எடுத்துரைத்தான் சதீஷ்.
“என்ன பாஸ் சொல்றீங்க?? காரணமே இல்லாம அழறதெல்லாம் இந்த depression ஓட symptoms ஆ??மாசமா இருந்த போது, என் wife அப்படி இருந்து பாத்திருக்கேன். “ரொம்ப பயமா இருக்குங்க”, னு சொல்லுவா. அப்பறம் திடீர்னு ‘ஓ ‘னு அழுவா. நான் ஒவ்வொரு தடவையும், “சும்மா மனச போட்டு வருத்திக்காத…எல்லாம் டெலிவரி ஆனா சரி ஆய்டும்”, னு அவ வாய அடைச்சிடுவேன்.
எங்க அம்மா கூட, “புள்ளத்தாச்சி பொண்ணு சும்மா சும்மா அழக்கூடாது. கண்ண தொடைச்சுக்கோ”, னு தான் சொல்லுவாங்க. அவ்வளவுதான்”, என சோகம் படர்ந்த முகத்துடன், தன் மனைவி கற்பித்திருந்த போது இருந்த நிலைமையை பற்றி விவரித்தான் மனோஜ்.
“அந்த நேரத்துல பயத்துக்கு நெறய காரணம் இருக்கும்…தாய்ப்பால் சரியா சுரக்குமான்னு இருக்கலாம், இல்ல இந்த குழந்தைய ஒழுங்கா பாத்துப்போமான்னு அவங்க மேலயே ஒரு சந்தேகம் ஏற்படலாம். கொழந்தை வர்றதுக்கு முன்னாடி நல்லா active ஆ இருந்திருப்பாங்க…திடீர்னு வீட்லியே அடைஞ்சு கெடக்கறதுனால ஏற்படற விரக்தி கூட பயமா உருவெடுக்கலாம்”, என தனக்கு தெரிந்த சில காரணங்களை முன்வைத்தான் சதிஷ்.
“கொஞ்சம் பயமா இருந்த விஷயம்னா, இந்த மனத்தளர்ச்சிய கண்டுபுடிச்சு சரியா சிகிச்சை செய்யலைனா , ரொம்ப severe நிலைமைக்கு போக வாய்ப்புகள் இருக்காம். அந்த மாதிரியான depression ல அம்மா தவிக்கும் போது, பொறந்த குழந்தையோட எடை, அறிவுத்திறன் கூட பாதிக்கப்படுமாம்”, என சதிஷ் கூறி முடிக்க,
“இதெல்லாம் எனக்கு புதுசா இருக்குங்க சதிஷ். இப்ப கொழந்தை பொறந்து ரெண்டு வருஷம் ஆனதுக்கு அப்பறமும் அவளுக்கு உடல் தளர்ச்சி, கோவம் எல்லாம் தலைத்தூக்கத்தான் செய்யுது. அதுவும் இந்த postnatal depression ஓட தொடர்ச்சியா இருக்குமோ?”, என ஆர்வத்துடன் வினவினான் மனோஜ்.
“நான் கூட அதப்பத்தி யோசிச்சேன். ஒரு குழந்தை வளர்ப்புல பெருசா யாரோட பங்கும் இல்லாத போது, உள்ளுக்குள்ளேயே போட்டு புழுங்கறதோட வெளிப்பாடுதான் இந்த கோவம், எரிஞ்சு விழறது எல்லாம் போலனு. அது உண்மையா மட்டும் இருந்தா, மனைவிய திட்டற மாதிரி சினிமா ல வர்ற பாட்டுகளும், கோவப்படற மனைவிய நக்கல் அடிக்கறா மாதிரி social media ல வர்ற forwards எல்லாம் ரொம்ப தப்புங்க”, என பதிலளித்தான் சதிஷ்.
ஒரு நிமிடத்திற்கு காரில் நிசப்தம்.
“ரட்சகன் பாட்டுல ஆரம்பிச்சு, இவ்வளவு serious ஆ போகும்னு நான் எதிர்பாக்கவே இல்ல. சாரி guys”, என உண்மையான வருத்ததுடன் அமைதியை உடைத்தான் சதிஷ்.
“இல்ல சதிஷ்…இந்த topic கொண்டு வந்ததுக்கு, நாங்க தான் உங்களுக்கு thanks சொல்லணும். Honestly ரொம்ப நல்ல கணவனா, மலரோட எல்லா தேவைகளையும் புரிஞ்சு நடக்கறதா ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். வாங்கிக்கொடுக்கற நகை, துணில வர்ற அந்த புன்னைகைய பாத்துட்டு, எல்லாம் சுமூகமாத் தான் போயிட்டு இருக்குனு நினைச்சிருக்கேன். அவ இன்னிக்கி working from home. முடிக்க வேண்டிய ரெண்டு வேலைய finish பண்ணிட்டு, இன்னிக்கே போய் பேச ஆரம்பிக்கறேன். once again thanks சதிஷ்”, என ஒரு சிறு புன்னகையுடன் கூறினான் வருண்.
“ப்ளீஸ்…thanks எல்லாம் எதுக்கு வருண்எ; னக்கு தெரிஞ்சத ஷேர் பண்ணிக்கிட்டேன்”, என சதிஷ் விடையளிக்க,
“ஆமாம் சதிஷ்…thank you. but நான் வருண் மாதிரி திடுதிப்புனு பேச ஆரம்பிச்சா, என் wife, “என்னங்க உடம்பு ஏதாவது சரியில்லையா…டாக்டர் கிட்ட போகணுமா”, னு கேப்பா. நான் இதை பத்தின வீடியோ ஏதாவது play பண்ணி, அவ கருத்த கேக்கப்பாக்கறேன்”, என கூறிக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்த மனோஜ், “சரி…எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு…அப்படியே கிளம்பறேன்”, என கார்பார்க்கில் வண்டி நின்ற உடன் விடைப்பெற்றுக்கொண்டான்.
“ஆமாம் நானும் கிளம்பறேன் வருண்”, என விடைபெற சதிஷ் எத்தனிக்க,
“வந்துட்டேன்…ஒரு நிமிஷம்”, என கூறியபடி வண்டியை வருண் அணைக்கும் போது,
“ஆழம் எது அய்யா…அந்த பொம்பள மனசு தான்யா”, என்ற பாடல் வானொலியில் ஒலித்தது.
இரு நண்பர்களும், ஒரு புன்னைகையை பகிர்ந்தபடி, அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
*************************************************************************************
சிறுகதை ஒலிப்பதிவு வடிவில்:
பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் பற்றிய என் கருத்துக்கள், ஒலிவடிவில்:
PPD பற்றிய ஆவணப்படம்:
PPD பற்றிய துண்டு வெளியீடுகள்: